மதுரை: தமிழகத்தில் குரு பூஜைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
திருமங்கலத்தைச் சேர்ந்த சத்திய பிரியா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜை, முத்தரையர் திருவிழா, தீரன் சின்னமலை விழா, வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, மருதுபாண்டியர் குருபூஜை, மூக்கையா தேவர் திருவிழா போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த விழாக்களால் சாதி மோதல்கள் நடக்கின்றன. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதனால் குரு பூஜை விழாக்களுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “ஒட்டுமொத்தமாக இது போன்ற விழாக்களை கொண்டாட அனுமதி மறுக்குமாறு கூறுவதை ஏற்க இயலாது. ஆயுதங்கள் இன்றி ஓர் இடத்தில் அமைதியாக கூட அரசியலமைப்புச் சட்டம் அனுமதி வழங்குகின்றது. அவற்றை முறைப்படுத்த சில நிபந்தனைகளை வேண்டுமானால் விதிக்கலாம். சுதந்திரமாக சென்று வரும் உரிமையையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.
தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் வழக்கும் பதிவு செய்யப்படும். எனவே மனுதாரர் கேட்கும் நிவாரணத்தை வழங்கக் கூடாது” எனக் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், “ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற விழாக்களை கொண்டாடும்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இருப்பினும் மோதல்களை தடுக்க இயலவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், இது போன்ற நிகழ்வுகளுக்கு முழுவதுமாக தடை விதிப்பது சாத்தியமில்லை என்றனர். அதற்கு மனுதாரர் தரப்பில், “ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு போலீஸை பாதுகாப்புக்கு அமர்த்தி, சட்டவிரோத செயல்கள் நடக்கையில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக பதிவு செய்யப்படுவதில்லை. காவல் துறையின் வாகனத்தின் மீது ஏறி ஆடினாலும் வழக்கு பதியப்படுவதில்லை சாதிக் கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறையினர் அஞ்சுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் இதுபோன்ற விழாக்களுக்கு முழுவதுமாக தடை விதிப்பது சாத்தியமற்றது. இவற்றை ஒழுங்குபடுத்த என்ன மாதிரியான நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது குறித்து மனுதாரர் தரப்பில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.