சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியைப் படித்ததும் மனதில் எழுந்த முதல் கேள்வியே கடந்த 5 நாட்களில் வெளியே தெரிய வந்த வன்கொடுமைகள் 17 எனில், வெளியே சொல்ல பயந்து மறைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனை?
இந்த 17 குற்றங்களில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் ஆகும். இந்த செயல்களை உற்றுநோக்கும் போது, கடந்த நான்காண்டுகளில் எத்தனை குழந்தைகளின் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது என்கிற கேள்வி எழுகிறது. ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்’ என்று போலியாக சூளுரைக்கும் தமிழக முதல்வரே, நம் வீட்டுப்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா?
ஆட்சி முடியும் தருவாயிலாவது வெற்று விளம்பரத்தை விடுத்து முதல்வர் ஸ்டாலின் வெளி உலகத்துக்கு வர வேண்டும். நிர்வாகத்திறன் இன்மையால், அவதியுறும் பொதுமக்களின் அழுகைக் குரலை கேட்டுப்பாருங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.