சிவகாசி / சாத்தூர்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் பேசியதாவது: வரும் 17-ம் தேதி நெல்லையில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய மூவரில், யாராவது ஒருவர் கலந்து கொள்வார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு பாஜகவினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும். 2029-ல் அதிக பாஜக எம்.பி.க்களை தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு அனுப்புவதே நமது இலக்கு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. ஆனால், இதைப் பற்றி கவலைப்படாமல் முதல்வர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்றும், ஆட்சியைப் பிடிப்போம் என்றும் பேசி வருகிறார்” என்றார்.
அதேபோல், சாத்தூரில் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறும்போது, “சாதியக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடி, நாய்க்கடிக்கு மருந்து இல்லை என்று கூறுகிறார்கள்” என்றார்.