திருவாரூர்: தமிழகத்தின் 11.9% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல். முருகன் வயிற்றெரிச்சலில் பேசுவதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி அரசினர் கலை கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவித்துள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் 9 சதவீதம் வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதையும் தாண்டி 11.19% உயர்ந்திருப்பதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகிறது.
தமிழகம் பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்திருப்பது 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் அடைந்தது. இந்நிலையில் கடந்த தேர்தல் வாக்குறுதியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி அடையும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது நான்கு ஆண்டுகளிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி என்பது 11.19% என்பது சாத்தியமாகி உள்ளது.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் முழு காரணம். தமிழக முதல்வரின் கடுமையான உழைப்பின் காரணமாக தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. தனிநபர் வருமானமும் இதன்பிறகு பன்மடங்கு உயரும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி என்பதை இலக்காக கொண்டு முதல்வரும், துணை முதல்வரும் அதிகாரிகளை அரவணைத்து சென்றதன் விளைவு தான் இன்றைய வளர்ச்சி, தொழில்துறை சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நிலையில், மத்தியில் உள்ள அமைச்சர் வேறு யாரேனும் விமர்சித்திருந்தால் மன்னித்து விடலாம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியிருப்பது வயிற்றெரிச்சல் தவிர வேறு ஏதும் இல்லை” என்றார்.