சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களின் எம்பிக்கள் எண்ணிக்கையை அதிகரித்து, தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக, தென்சென்னை எம்பி., தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசு மக்களாட்சி என்ற மகத்தான அரணை புல்டோசர்களைக் கொண்டு இடித்து தள்ளி நாசம் செய்யும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது.
எந்தவித விவாதங்களுமின்றி மக்களைப் பாதிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவது, சர்வாதிகார போக்கோடு மாநிலங்களை வஞ்சிப்பது தொடர்கதையாகி வருகிறது. அதன் உச்சமாக அவர்கள் நிறைவேற்றத் துடிப்பதுதான் 2027 மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை.
அரசியலமைப்புப்படி, 2026-க்கு பின் எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்றி மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத பாஜக ஆளும் மாநிலங்களின் எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழகம் உள்ளிட்ட மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய அரசு சதி செய்கிறது.
இச்சதியை ஆரம்பத்திலேயே அம்பலப்படுத்தி , பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஓரணியில் திரட்டி நியாயமான தொகுதி மறைவரையறை மேற்கொள்ள வலியுறுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போதெல்லாம் அதனை வீண் பயத்தை உண்டாக்குகிறார் என்று மூடி மறைக்க நினைத்தவர்கள் இப்போது 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர்.
கரோனா காரணமாக 2021-இல் எடுக்காமல் விட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை 2023-ல் எடுத்திருக்கலாம், 2024, 2025-இல் எடுத்திருக்கலாம். ஆனால் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி 2027-ல் எடுப்பதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான், அது 2027 மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே.
தமிழக மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. தமிழகத்தின் குரல்வளையை நசுக்கி அரசியல் உரிமைகளற்ற அடிமைகளாக மாற்றும் மத்திய பாஜக அரசின் சதி திட்டத்தை எல்லாம் அறியாதவர்கள் அல்ல. தமிழக மக்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான், நேர்மையாக பதில் அளியுங்கள். 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரையறை நடைபெற்றால் நாடாளுமன்றத்தில் 7.18 சதவீதம் என்ற தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையுமா? குறையாதா?
இல்லை, தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப் போவதில்லை என்றால் 2026-இல் காலாவாதியாகும் சட்டத்திருத்தத்திற்கு மாற்றாக மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைக்கும் சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்படும் என்பதை மத்திய அமைச்சர் அமித்ஷா சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தயாநிதி மாறன் கேள்வி: இதனிடையே, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் இதுகுறித்து நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும். அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027-ல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது மத்திய பாஜக அரசு.
பாஜக அரசின் இந்த சதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதனால் பாதிக்கப்போகும் மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்களை ஓரணியில் அணிதிரட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
அப்போதெல்லாம் தமிழக முதல்வர் வீண் பதற்றத்தை உண்டாக்குகிறார் எனக் கூறி வந்தவர்களின் குட்டு இப்போது மக்கள் முன் அம்பலப்பட்டு கிடக்கிறது. இதோ நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது அந்த ஆபத்து. இப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்லப்போகிறார்.
தமிழகத்தின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம். மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவ விகிதமான 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.