நித்யானந்தா என்றைக்கு அடியெடுத்து வைத்தாரோ அன்று முதலே மதுரை தெற்காவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்துக்குள் சர்ச்சைகள் சம்மணம் போட்டு உட்கார ஆரம்பித்துவிட்டன. அந்த விதத்தில் இப்போது, மடத்தில் தம்பிரான் பட்டமேற்ற விஸ்வலிங்க தம்பிரான் மாவட்ட ஆட்சியரிடம் மதுரை ஆதீனத்துக்கு எதிராக பிராது கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி வருகிறது.
மதுரை ஆதீன மடத்திற்கு இளைய ஆதீனமாக இன்னொருவருக்கு பட்டம் சூட்டுவதை தடுக்க வேண்டும் எனவும், தகுதியான தன்னையே இளைய ஆதீனமாக நியமிக்க வேண்டும் எனவும் தனது புகாரில் தெரிவித்துள்ள விஸ்வலிங்க தம்பிரான், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, முக்தி அடைந்த ஆதீனம் அருணகிரிநாதரின் சமாதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு கவனம் ஈர்த்தார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவை அடுத்து, 293-வது ஆதீனமாக ஆகஸ்ட் 2023-ல் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றார். இவருக்கு விஸ்வலிங்க தம்பிரான் பணிவிடைகள் செய்து வந்தார். இந்நிலையில், இவர்களுக்குள் பிரச்சினை வெடித்ததால் விஸ்வலிங்க தம்பிரான் சில காலமாக ஆதீன மடத்துக்கு வெளியில் இருக்கிறார். இதற்கிடையில் தான், தன்னை விட்டு விட்டு இன்னொருவரை இளைய மடாதிபதியாக நியமிக்க மதுரை ஆதீனம் முயற்சி செய்வதாக ஆட்சியருக்கும் அறநிலையத் துறை அமைச்சருக்கும் புகார்களை அனுப்பி இருக்கிறார் விஸ்வலிங்க தம்பிரான்.
“மறைந்த ஆதீனம் அருணகிரிநாதரிடம் 2018-லேயே தீட்சை பெற்ற தான் தான் இளைய ஆதீனமாக பொறுப்பேற்க வேண்டும். இதை இப்போதுள்ள ஆதீனத்திடம் அருணகிரிநாதர் முன்கூட்டியே தெளிவுபடுத்திச் சென்றிருந்தும் அதையெல்லாம் மீறி இன்னொருவரை இளைய பட்டத்துக்கு கொண்டுவர முயற்சிக்கிறார்” என்று சொல்லும் விஸ்வலிங்க தம்பிரான், “சைவ வேளாளர், சைவ முதலியார், கார்காத்த வேளாளர் ஆகிய மூன்று பிரிவினர் மதுரை ஆதீனம் ஆகலாம் என உள்ளது. நான் கார்காத்த வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவன். தற்போதுள்ள ஆதீனம் சைவ வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது சமுதாயத்தைச் சேர்ந்தவரை இளைய ஆதீனமாக கொண்டுவர முயற்சிக்கிறார்.
நான் திருமணமாகி விவகாரத்து ஆனவன் என்பதால் என்னை இளைய ஆதீனமாக கொண்டு வர மறுக்கிறார் ஆதீனம். ஆனால், அவர் இளைய ஆதீனமாக கொண்டுவர நினைக்கும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவரும் என்னைப் போலவே விவகாரத்து ஆனவர் தான். நான் விவகாரத்து ஆனவன் என்று தெரிந்தே தான் அருணகிரிநாதர் எனக்கு தீட்சையளித்தார்.
தனக்கு முந்தைய ஆதீனமும் திருமண வாழ்க்கையில் இருந்து விவகாரத்து ஆனவர் தான் எனவும் அருணகிரிநாதர் என்னிடம் சொல்லி இருக்கிறார். அருணகிரிநாதரை நான் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டேன். அதெல்லாம் இப்போதுள்ள ஆதீனத்துக்குப் பிடிக்காததால் இப்போது என்னை இளைய ஆதீனமாக வரவிடாமல் தடுக்கிறார்.
இப்போதுள்ள ஆதீனம் மதுரை ஆதீன மரபுகளை மீறி செயல்படுகிறார். தேவையில்லாமல் அரசியல் பேசியதால் இப்போது மதுரை ஆதீன மடத்துக்குள் போலீஸார் நுழைந்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆதீனம் நீதிமன்ற படியேறி முன்ஜாமீன் பெற்றதெல்லாம் ஆதீன மரபுகளுக்கு எதிரானது.
ஆதீனத்தின் பணி சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதும், அரசாங்கத்தை ஆசிர்வாதம் செய்வதும்தான். ஆனால், இதைத் தவிர மற்ற வேலைகளை எல்லாம் செய்து வருகிறார். ஆதீன மடத்தில் தம்பிரான், ஒடுக்கம் தம்பிரானாக இருப்பவர்கள் மட்டுமே இளைய ஆதீனமாக வரத் தகுதியானவர்கள். அந்தத் தகுதி எனக்கு உள்ளது” என்றார்.
இது விஷயமாக நாம் மதுரை ஆதீனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது விஷயத்தைக் கேட்டவர், “இது விஷயமா நான் பிறகு பேசுகிறேன்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.