சென்னை: தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று ( செப்டம்பர் 4) இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து ஆற்றிய உரையில், “ பல நூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இப்போது புலங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
இங்கே நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான தி.மு.கழகத்தின் தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்ல; பெரியாரின் பேரன் என்கிற கம்பீரத்துடன் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
பகுத்தறிவுப் பகலவன் – அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்ததை, என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். பகுத்தறிவுப் பட்டொளி, உலகம் முழுக்கப் பரவி வருகிறது என்பதன் அடையாளம்தான் இந்த படத்திறப்பு விழா.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அறிவுடைய அடையாளம் மட்டுமல்ல; உரிமையின் அடையாளம் இது. மனித உரிமையின் அடையாளம். உலக அடையாளம். அப்படிப்பட்ட பெரியாரின் படம் இங்கு திறக்கப்படுவது என்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்றாகும்.
தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். பலமுறை பெரியாரை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அவர் வந்திருக்கிறார். அந்த நேரத்தில் நான் அவருக்கு உணவு பரிமாறி இருக்கிறேன். இதை சொல்லும்போதே எனக்கு பெருமையாக இருக்கிறது!
ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை.
1983 செப்டம்பர் 21-ஆம் நாள், இதே ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டியில், வீரமணி கலந்து கொண்ட தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நடந்தது. அது நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்குப் பிறகு, இன்றைக்கு மீண்டும் ஆக்ஸ்ஃபோர்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி பரவுகிறது!
தந்தை பெரியாருக்கு மிக மிகப் பிடித்த சொல் என்ன என்று கேட்டீர்கள் என்றால், சுயமரியாதை. உலகத்தில் எந்த அகராதியை கொண்டுவந்து காட்டினாலும், இதைவிட சிறந்த சொல்லைக் காட்ட முடியாது என்று சொன்னார் தந்தை பெரியார்.
ஒரு மனிதனுக்கு சுயமரியாதை எண்ணத்தை ஊட்டிவிட்டால், அவன் வெற்றிப் பெற்றிடுவான் என்று சொன்னார். அதுமட்டுமல்ல, “உலகத்திலேயே உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்றே ஒன்று சுயமரியாதைதான்” என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னார்.
மனிதனின் சுயமரியாதையைக் காக்கத்தான் அனைத்து அரசியல் தத்துவங்களும் தேவை என்று சொல்லி, தான் உருவாக்கிய இயக்கத்துக்கே சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார்.
தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தார். தமிழில் பேசினார். ஆனால் அவருடைய சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; மானிடச் சமுதாயத்திற்கானது! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது! அதுதான் பெரியாரியம்!
பெரியாரியம் என்றால் என்ன என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டிய அடிப்படைகள் என்னவென்றால், சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், மானுடப்பற்று, ரத்த பேதமில்லை, பால் பேதமில்லை, சுய முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சமூகநீதி, மதசார்பற்ற அரசியல், அறிவியல் மனப்பான்மை என்று பெரியாரியத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பரந்து விரிந்த அறிவுக்கடலான அவருடைய சிந்தனைகளை உள்வாங்க, இந்த அறிமுகம் நிச்சயம் பயன்படும்!
இந்தச் சிந்தனைகளின் அடிப்படையிலான சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளாக, ஆறு குறிப்புகளை, ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதினார்.
அவற்றைச் நான் சொல்லவேண்டும் என்றால், முதலில், சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு, தாழ்வும் இருக்கக் கூடாது. இரண்டாவது, ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாக இருக்கவேண்டும்.
மூன்றாவது, ஆணுக்கும், பெண்ணுக்கும் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும். நான்காவது, சாதி, மதம், தேசம், வருணம், கடவுள் ஆகியவை இல்லாத மனித சமூக ஒற்றுமை நிலவ வேண்டும்.
ஐந்தாவது, அனைத்து மனிதரும் உழைத்து அதன் பயனை அனைவரும் சமமாக பயன்படுத்த வேண்டும். ஆறாவது, யாரும் எதற்கும் அடிமை ஆகாமல், அவரவர் அறிவு – ஆராய்ச்சி – உணர்ச்சி – காட்சி ஆகியவற்றுக்கு இணங்கி நடத்த முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.
துணிச்சல்தான் தந்தை பெரியார். அதனால்தான், காலங்கள் கடந்தும், என்றென்றும் பெரியார் என்று எல்லோராலும் நினைக்கப்படுகிறார். இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும், தந்தை பெரியார் தொடர்ந்து நினைக்கப்படுவார்; போற்றப்படுவார்!
அவர் இந்தச் சமூகத்தில் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு! அதனால்தான் “நானே சொன்னாலும், உன் புத்திக்கு சரி என்று பட்டது ஏற்றுக்கொள், இல்லையென்றால் விட்டுவிடு” என்று சொன்னார் தந்தை பெரியார்.
இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அத்தனை அறிவியல் மாற்றங்களையும், ‘இனிவரும் உலகம்’ என்று தொலைநோக்குப் பார்வையுடன் சொன்ன சிந்தனையாளர் தந்தை பெரியார். பகுத்தறிவும், அறிவியலும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். அறிவின் கூர்மைதான் பகுத்தறிவு என்று எடுத்துச் சொன்னதால்தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அவரைப் பற்றி அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் விவாதிக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகம் வெளியிடுகிறது.
உலகம் எத்தனையோ சிந்தனையாளர்களை, சீர்திருத்தவாதிகளைப் பார்த்திருக்கிறது! எத்தனையோ புரட்சிகரமான சிந்தனைகளை அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால், அந்த சிந்தனைகளை செயல்வடிவமாக்குகின்ற ஆட்சியாளர்கள் இருக்க மாட்டார்கள்.
நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும்தான், ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக எழுச்சிப் பெற்று, வெகுசன மக்களை கன்வின்ஸ் செய்து, அவர்களுடைய ஆதரவை வாக்குகளாக பெற்று, சீர்திருத்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, அவற்றை சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மையடைய வைத்திருக்கிறது.
சமூகநீதிக் கொள்கையை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான கொள்கையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற வைத்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் போராடினார் தந்தை பெரியார். ஆட்சி அதிகாரத்தை அடைந்து, அதைச் செய்து காட்டினார் அண்ணா. கருணாநிதி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வேண்டும் என்று பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார். அதை சட்டம் ஆக்கியவர் முதலமைச்சராக இருந்த கருணாநிதி. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் அதிகாரம் வேண்டும் என்று பெரியார் சொன்னார். அதைச் சட்டம் ஆக்கி நிறைவேற்றித் தந்தது திராவிட இயக்கத்தின் ஆட்சி.
தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னேறிக் கொண்டு வருகிறது. கல்வியில், பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியில், வாழ்க்கைத்தரத்தில், உள்கட்டமைப்பு வசதியில் முன்னேறி இருக்கிறோம். உழைப்பின் சாதனை, உற்பத்தி சாதனையாக மாறி இருக்கிறது.
பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வளமான தமிழ்நாடாக வளர்த்து வருகிறோம். மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை.
அந்த வகையில், பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவவேண்டும். இங்கே நிலவுகின்ற அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் களையவேண்டும். சமூக உரிமைகள் முதல் தனிமனித உரிமைகள் வரை அனைத்தும் நிலைநாட்டப்படவேண்டும். ஒவ்வொரு பிரிவினரின் உரிமையையும் இடஒதுக்கீடு என்ற உரிமை மூலமாக நிலைநாட்டி இருக்கிறோம். அதேபோன்ற இடஒதுக்கீட்டுக் கொள்கையை அனைத்து நாடுகளும், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கவேண்டும். சமூக உரிமையில் அக்கறை கொண்ட அமைப்புகள் முன்னெடுக்கவேண்டும்.
பல்வேறு உலக மொழிகளில் பெரியாரின் கருத்துகளை தமிழ்நாடு அரசு மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. இன்றைக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வெளியிட்டு இருப்பது போல, மற்ற பல்கலைக்கழகங்களும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
“சுயமரியாதை உணர்ச்சிதான் உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாக மாற்றும். அப்போதுதான் இந்த இயக்கத்தின் உண்மைச் சக்தியும், பெருமையும் வெளிப்படும்” என்று பெரியார் சொன்னார். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையை வென்றெடுக்க இதுபோன்ற கருத்தரங்குகள் வழிவகுக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சராக எத்தனையோ வெளிநாடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்கே நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கிறேன். ஆனால், இந்த நிகழ்ச்சி, என்னை உணர்ச்சிவயப்பட வைத்திருக்கிறது. அந்த உணர்ச்சி யாரென்றால் தந்தை பெரியார். காரணம், இது பெரியாருக்கான நிகழ்ச்சி!
லண்டனில் இருக்கின்றேனா இல்லை, தமிழ்நாட்டில்தான் இருக்கின்றேனா என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இந்த அழகான, அவசியமான, அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, எல்லோருக்கும் எல்லாம் செய்து, பெருமைப்படுத்தியிருக்கும் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் உலகமயம் ஆகிறார். உலகம், மானுடத்தன்மையை மதிப்பதாக மாறட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.