சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி நாளை (ஜூன் 5) திரைக்கு வர உள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக செயல்படும் 793 இணைதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நாளை உலகம் முழுவதும் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக செயல்படும் 793 இணைதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம் இண்டர்நேஷனல் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு அப்போது ராஜ்கமல் நிறுவன தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ”‘தக் லைஃப்’ திரைப்படம் 3500 -க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும், இத்திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
சட்டவிரதோமாக இணைதளங்களில் வெளியானால் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு வர்த்தக ரீதியாக மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, ‘தக் லைஃப்’ திரைப்படத்தை பிஎஸ்என்எல் உள்ளிட்ட இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள், கேபிள் டிவி நிறுவனங்கள் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.