ராஜபாளையம்: ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் அடிப்படையில் விரைவில் தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியில் ரூ.5.96 கோடி மதிப்பில் குளிர் சாதன வசதி உடன் திருமண மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எம்.பி ராணி, எம்.எல்.ஏ தங்கபாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.46 கோடி, பொது நிதியில் ரூ.1.50 கோடி என மொத்தம் ரூ.5.96 கோடி திருமண மண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக சார் பதிவாளர் அலுவலகம் அருகே 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. திருமண மண்டப கட்டுமானப் பணிக்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது: ”சமுதாய கூட்டங்களில் உணவு உண்ணும் இடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இருக்காது. ஆனால் இந்த திருமண மண்டலத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும். எம்எல்ஏ பேசுவதை வைத்தே தேர்தல் வந்து விட்டது என்பதை தெரிந்து கொண்டோம். உரிமையோடு உங்களிடம் வாக்கு கேட்பதற்காக இந்த பணிகளை செய்கிறோம்.
கடந்த முறை பெறப்பட்ட 1.60 கோடி விண்ணப்பங்களில் 1.15 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. தற்போது ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பெறப்பட்டு உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என முதல்வர் கூறி உள்ளார்” என்று அமைச்சர் கூறினார்.
முன்னதாக ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் ரூ.70 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மதுரை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.