கோவை: டிஜிபி நியமனத்தில் திமுக அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜனப் பொதுக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026-ம் ஆண்டு ஓய்வுபெறப் போகிறார். அதனால் பிரிவுபச்சார விழாவாக ஜெர்மனி, லண்டனுக்கு சென்றுள்ளார். ஆட்சிக்கு வந்தால் இந்து கோயில்களை புனரமைக்க ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என்றனர். நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 155 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி-யாக ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெற்ற நிலையில் 6 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். அவர்களில் முதல் மூவரில் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டும்கூட, டிஜிபியாக ஒருவரை நியமிக்கவில்லை. 9-வது இடத்தில் உள்ள ஒருவரை பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளனர். டிஜிபி விவகாரத்தில் திமுக அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் சென்னை 21-வது இடத்தில் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.