சென்னை: சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனை அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மேலும், சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனையின்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனின் வீட்டின் அருகே கிழிந்த நிலையில் கிடந்த வாட்ஸ்அப் ஸ்க்ரீன்ஷாட் நகல்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அதேபோல், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனின் மனைவி, மகனிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, விசாகனை அமலாக்கத் துறையினர் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை விசாகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது அமலாக்கத் துறை. இதனால், அமலாக்கத் துறையின் அடுத்தடுத்த விசாரணை நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
இந்தச் சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.