விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக் கணக்கு குழு மூலம் ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விழுப்புரம் வருகை புரிந்தார்.
முன்னதாக சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்த நாளில் இருந்து, வெளியே வரவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. பாஜக தலைவர்கள் அவரை சிறைபிடித்து வைத்துள்ளார்களா? ஜெகதீப் தன்கர் மக்களிடம் செல்வதை பாஜக தடுக்க முயற்சிக்கிறதா? அவரை வெளியே வரவிடாமல் தடுத்துள்ள சக்தி யார்? அவரை மக்களிடம் பாஜக தலைவர்கள் காண்பிக்க வேண்டும்.
இல்லையெனில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்படும். குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கு நெருக்கடி கொடுத்தது யார்? சட்டம் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றியவர் ஜெகதீப் தன்கர். அவருக்கே பாதுகாப்பு இல்லை. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி 50 சதவீதத்துக்கும் கூடுதலாக வாக்குகளைப் பெறும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.