தேமுதிக மண்டல மற்றும் தொகுதிவாரியான பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் ஜூன் 11 முதல் 14-ம் தேதி வரை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், கூட்டணி, பூத் கமிட்டிகள் அமைப்பு என தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அந்தவகையில், தேமுதிகவும், கட்சிரீதியான கட்டமைப்பு வலுப்படுத்தி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாகவும், மண்டலம் வாரியாகவும் புதிய பொறுப்பாளர்களை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்துள்ளார்.
இதற்கிடையே கடந்த மக்களவைத் தேர்தலின்போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக அதிமுக உறுதி அளித்திருந்தது. ஆனால், அடுத்தாண்டுதான் வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துவிட்டது. அதைத்தொடர்ந்து, எங்களின் கூட்டணி நிலைப்பாட்டை அடுத்த ஆண்டு ஜன.9-ம் தேதி கட்சி மாநாட்டில் தெரிவிப்போம் என்று பிரேமலதா அறிவித்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தொகுதி வாரியாகவும், மண்டலம் வாரியாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் ஜூன் 11 முதல் 14-ம் தேதி வரை சென்னை கோயம்பேட்டியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பிரேமலதா ஆலோசனை நடத்துகிறார்.
இதில், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள், தேர்தல் கூட்டணி நிலவரம், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.