சென்னை: சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த அரசு மருத்துவமனை 120 ஆண்டுகளைக் கடந்த ஒரு பழமையான மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் சைதாப்பேட்டையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை, சோழிங்கநல்லூர், அக்கரை போன்று பல்வேறு இடங்களிலிருந்தும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ரூ.28.70 கோடியில் 68,920 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் பல்வேறு வசதிகள் வரவுள்ளன. ரோட்டரி சங்கத்தின் சார்பில் 14 டயாலிசிஸ் இயந்திரங்கள் தற்போது மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவருக்கு டயாலிசிஸ் செய்ய 4 மணி நேரம் ஆகும். அந்த வகையில் தினமும் 3 பிரிவுகளாக இந்த இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இதனை அதிகரிக்க ரோட்டரி சங்க நிர்வாகிகளிடம் மேலும் 11 டயாலிசிஸ் இயந்திரங்களை கேட்டிருக்கிறோம். இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும்போதே 25 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கும். இந்த மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி ஒன்றை ரோட்டரி சங்கம் ஏற்படுத்தித் தரவுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.