சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்கள் பதியப்பட்ட ‘மதிப்புச்சுவர்’ வரும் 30-ம் தேதி திறக்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 139, மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள மயானத்தின் மேம்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மயானக் கூடங்கள், குறிப்பாக எரிவாயு தகன மேடைகளை சீர்படுத்தி மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள 2 எரிவாயு தகன மேடைகள் ஏற்கெனவே புதிதாகக் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த மயானத்தில் மாதம் 100 பேரின் உடல்கள் அடக்கம், தகனம் செய்யப்படுகின்றன. இந்த மயானம் பசுமைப் பகுதியாகவே இன்றைக்கு இருந்து வருகிறது. அனைத்து மத அடக்க இடங்களிலும் பசுமைப் பரப்பை அதிகரித்து, ஒவ்வொரு மயானமும் பூங்காக்களுக்கு இணையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சைதாப்பேட்டையில் உள்ள இந்த மயானத்தை ரூ.94.83 லட்சத்தில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மயானத்தைச் சுற்றி சிமென்ட் கான்கிரிட் சாலைகள், இன்டர்லாக்கிங் லாண்ட்ஸ்கேப்பிங் பணிகள், குளியல் அறை மற்றும் கழிப்பறை கட்டுவது, சுற்றுச் சுவரை உயர்த்திக் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பயனாளிக்கு, வீல் சேரை எடுத்து வர பணியாளர் சென்றிருந்த நேரத்தில் தனது தந்தையை ஆதங்கத்தின் காரணமாக மகன் தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். அதனை உடனே அருகில் இருப்பவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
அது குறித்து தெளிவாக சம்பந்தப்பட்ட டீன் விளக்கம் கொடுத்திருக்கிறார். தினமும் 4,000 பேருக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ மனையில் சக்கர நாற்காலி கூடவா இல்லாமல் இருக்கும்? மூளைச்சாவு அடைந்து, உடலுறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2024-ம் ஆண்டு செப். 23-ம் தேதி முதல்வர் அறிவித்தார்.
இதுவரை 513 கொடையாளர்களிடமிருந்து உடலுறுப்பு தானம் பெறப்பட்டுள்ளது. மேலும் அவர்களை சிறப்பிக்கும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதலின்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வரும் 30-ம் தேதி ‘wall of honor – மதிப்புச்சுவர்’ திறந்து வைக்கப்படவுள்ளது. இதுவரை மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்களை அதில் உள்ள கல்வெட்டில் பதிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
அமெரிக்கா – வியட்நாம் இடையே நடந்த போரில் உயிர்நீத்தவர்களின் பெயர்களை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சுவரில் கல்வெட்டாக வைத்திருக்கிறார்கள். அதை மாதிரியாகக் கொண்டு நமது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மதிப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையை தொடர்ந்து தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மதிப்புச்சுவர் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்கள் அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள சுவர்களில் நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.