சென்னை: மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களை சிலர் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக, எச்சில் துப்புவது, ஆங்காங்கே புகையிலை குப்பைகள் கொட்டுவது போன்ற சுகாதாரமற்ற நிலை காணப்படுகின்றன. இது தொடர்பாக புகார்கள் அதிகப்படியாக வந்தன.
இதை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: புகையிலையை உட்கொள்வது உடல்நலத்துக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலை ஏற்படக் காரணமாகிறது. மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் தூய்மை, சுகாதாரத்தை பராமரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களுக்கு உள்ளேயும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களை மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கண்டறிய முடியாததால், நெரிசல் இல்லாத நேரங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தப்படும். அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் சீரற்ற உடல் சோதனைகள் மேற்கொள்ளப்படும். இதுதவிர, பயணிகளின் நடவடிக்கைகளை நடை மேடை பாதுகாப்புப் பணியாளர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு மெட்ரோ ரயில்வேஸ் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) சட்டம் மற்றும் மெட்ரோ ரயில்வேஸ் கேரஜ் மற்றும் டிக்கெட் விதிகள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும்.” என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.