சென்னை: சென்னையில் ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு கால்நடை காப்பகம் அமைக்க மூலதன நிதியின் கீழ் ரூ.19.44 கோடியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி திருவொற்றியூர் – டி.பி.பி.சாலை, மணலி – செட்டிமேடு, மாதவரம் – சிஎம்டிஏ லாரி முனையம், தண்டையார்பேட்டை – செல்லவாயல், ராயபுரம் – பேசின் பாலச் சாலை மற்றும் மூர்மார்க்கெட், அண்ணாநகர் – செனாய் நகர், தேனாம்பேட்டை – பீட்டர்ஸ் சாலை, கோடம்பாக்கம் – காந்தி நகர், வளசரவாக்கம் – நொளம்பூர், யூனியன் சாலை, ஆலந்தூர் – பி.வி.நகர், பெருங்குடி – வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெரு மற்றும் தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை, சோழிங்கநல்லூர் – பயோ சிஎன்ஜி நிலையம் என 13 கால்நடை காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் ராயபுரம், பேசின் பிரிட்ஜ் சாலையில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்கடந்த ஜூன் 11-ம் தேதி திறந்து வைத்தார். இந்த கால்நடை காப்பகமானது கால்நடை மருத்துவர் அறை, பராமரிப்பாளர் அறை, கட்டுப்பாட்டு அறை, மருந்துகள்வைப்பு அறை, 12 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 240 கால்நடைகளை பராமரிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு ஒரு கால்நடைக்கு நாளொன்றுக்கு ரூ.10 பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர மண்டலங்களில் நடைபெறும் கால்நடை காப்பகங்கள் கட்டும் பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு, கால்நடை காப்பகங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.