சென்னை: 3 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தும் பணிக்காக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார். இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த ‘குரூஸ் பாரத் மிஷன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஆசிய உறுப்பு நாடுகளுடன் கப்பல் போக்குவரத்து சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சென்னை துறைமுகத்தில் 4 புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2029-ம் ஆண்டுக்குள் கப்பல் பயணிகள் போக்குவரத்தை இரட்டிப்பாக்குவதையும், 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான கப்பல் பயண வழித்தடங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு ‘குரூஸ் பாரத் மிஷன்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஆசிய-இந்திய கப்பல் போக்குவரத்து கலந்துரையாடல் நிகழ்வு இந்தியாவில் 2-வது முறையாக நடத்தப்பட்டது.
இதில் கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கப்பல் போக்குவரத்து தொடர்புடைய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கலந்துரையாடல் மூலம் இந்தியாவில் கப்பல் போக்குவரத்து மேம்படும். சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் முனையம் தற்போது 1,500 பயணிகளைக் கையாளும் வகையில் உள்ளது.
3 ஆயிரம் பயணிகளைக் கையாளும் வகையில் இந்த முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று இங்குள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கையாள்வதற்கான சேமிப்பு மையம் ரூ.36.91 கோடியில் 9.90 ஹெக்டேர் பரப்பளவில் மேம்படுத்தப்பட உள்ளது.
கப்பல் பணியாளர்களின் நலன் மற்றும் வசதிக்காக செயல்பட்டு வரும் கிளப் ரூ.5.10 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. சென்னை துறைமுகத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான ஹைட்ராலிக் பவர் கட்டிடத்தை நினைவுச் சின்னமாக மாற்றி கடல்சார் வரலாற்றை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியத்தை உருவாக்க அந்த கட்டிடம் ரூ.5.25 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இந்த புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு வரை கப்பல் போக்குவரத்தை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 84 ஆயிரமாக இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டுக்கால ஆட்சியில் கப்பல், துறைமுகம், நீர்வழிச்சாலை துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களால் இந்த எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளது. 2029-ம் ஆண்டுக்குள் பயணிகள் கப்பல் போக்குவரத்து மூலம் 10 லட்சம் பயணிகளைக் கையாள்வதை இலக்காகக் கொண்டுள்ளோம்.
பசுமை தொழில்நுட்பம்: 2030-ம் ஆண்டுக்குள் உலகின் முதல் 10 கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றாகவும், 2047-ம் ஆண்டுக்குள் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றாகவும் இந்தியா மாறும். சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு கப்பல் மற்றும் துறைமுகங்களில் பசுமை தொழில்நுட்பங்களை மேற்கொண்டு வருகிறோம்.
2050-ம் ஆண்டுக்குள் கப்பல் மற்றும் துறைமுகங்கள் முழுமையாக பசுமை தொழில்நுட்பங்களை கொண்டவையாக இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை செயலாளர் ராமச்சந்திரன், சென்னை துறைமுக சபை தலைவர் சுனீல்பாலிவால் ஆகியோர் உடனிருந்தனர்.