சென்னை: இரண்டரை மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்த கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் என்ற கே.ஆர்.ஸ்ரீராம் கடந்த 2024 செப்.27 அன்று பொறுப்பேற்றார். இவர் வரும் செப்.27-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யவும், அங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் ஸ்ரீவத்சவாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மே மாதம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான கே.ஆர். ஸ்ரீராமை, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். இன்னும் இரண்டரை மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வரும் பட்டு தேவானந்தை, ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்தும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.