திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, ஈக்காடுகண்டிகையில், சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி-3 பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் செல்லும் கனரக வாகன போக்குவரத்தால் நெருக்கடி ஏற்படுகிறது. இதனை குறைப்பதற்கு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், தெற்குப் பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் எண்ணூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக சென்றடையவும், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வணிக மற்றும் தொழில் வளங்களை அதிகரிக்கவும் சென்னை எல்லை சாலை அமைக்க தமிழக அரசால் திட்டமிட்டப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து மாமல்லபுரம் வரை 132.87 கி.மீ. நீளம் அமைக்கப்பட உள்ள இந்த சென்னை எல்லை சாலைத் திட்டத்தில், பகுதி-1 மற்றும் 2 பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை எல்லை சாலைத் திட்டம்- பகுதி-3 பணி தொடக்க விழா வியாழக்கிழமை காலை திருவள்ளூர் அருகே உள்ள ஈக்காடுகண்டிகையில் நடைபெற்றது.
இவ்விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி-3 பணிகளை, திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை ரூ. 2,689.74 கோடி மதிப்பில் 30.10 கி.மீ., நீளத்துக்கு, சேவை சாலைகளுடன் கூடிய புதிய ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், பொதுபணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், எம்எல்ஏக்களான கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.