சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, சுமார் ரூ.10 கோடியில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது. கோல்டு (ரூ1,000), டைமண்ட் (ரூ.2,000), பிளாட்டினம் (ரூ.3,000), பிளாட்டினம் பிளஸ் (ரூ.4,000) என நான்கு வகையானபரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழு உடல் பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்திலேயே முதன்முறையாக, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டமும் இங்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், அடுத்த கட்டமாக புற்றுநோய் பாதிப்புகளை அறிவதற்கான பரிசோதனைத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஆர்.மணி கூறியதாவது: சமூகத்தில் புற்றுநோய் பாதிப்பு தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்கு பிரத்யேகமாக மருந்தியல், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, வலி மற்றும் நிவாரண சிகிச்சை, இடையீட்டு கதிர்வீச்சு சிகிச்சை உள்ளிட்ட துறைகள் செயல்படுகின்றன. அதற்கான அதிநவீன உபகரணங்களும், மருத்துவக் கட்டமைப்புகளும் இங்கு உள்ளன.
அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே, ரத்த பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். அதனால், இந்த மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்தில் புதிதாக டைட்டானியம் பரிசோதனை திட்டத்தை அடுத்த சில தினங்களில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
இதற்கு ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் கீழ் 10-க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். டைட்டானியம் திட்டத்தில் விந்தணு சுரப்பி, கருப்பை, கணையம், கருப்பை வாய், கல்லீரல் உள்ளிட்டவை சார்ந்த புற்றுநோய்களை கண்டறிவதற்கான பரிசோதனைகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.