சென்னை: தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், வழியெங்கும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு விஜய்யால் செல்ல முடியவில்லை.
இதனால், திருச்சி, அரியலூரில் மட்டும் மக்கள் சந்திப்பை நடத்திவிட்டு, பெரம்பலூர் செல்லாமல், விஜய் சென்னை திரும்பினார். இந்நிலையில், சென்னையில் விஜய் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக, சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு தலைமையில் தவெக நிர்வாகிகள் காவல் ஆணையர் அருணிடம் அனுமதி கோரி நேற்று மனு அளித்தனர்.
அதன்படி, செப்.27-ம் தேதி வட சென்னையிலும், அக்.25-ம் தேதி தென் சென்னையிலும் சாலை மார்க்கமாக சென்று விஜய் மக்களை சந்திக்க உள்ளார். முல்லை நகர், அகரம், ராயபுரம், புளியந்தோப்பு, கொருக்குப்பேட்டை, ஐஸ் அவுஸ், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், எம்.ஜி.ஆர். நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், கண்ணகி நகர், ஆலந்தூர், வேளச்சேரி, வில்லிவாக்கம், அயனாவரம், அம்பத்தூர், மதுரவாயில் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து விஜய் பேசுவார் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதற்கான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், உரிய அனுமதியும் கொடுக்க வேண்டும் என்றும் மனுவில் தவெகவினர் தெரிவித்துள்ளனர்.