சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பில், தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 18ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் அயனாவரம், வடபழனி உள்பட அனைத்து பணிமனைகளில் தொழிலாளர்கள் இன்று கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு மாநகர போக்குவரத்துக் கழக பிரிவு தலைவர் துரை, பொதுச்செயலார் தயானந்தம், பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, பொதுச் செயலாளர் தயானந்தம் கூறுகையில் “போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று, உறுதி அளிக்கும் வரையில் எங்களது போராட்டம் தொடரும். ஓய்வூதியர்களுக்கான பணப் பலன் எப்போது வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்” என்றார்.