சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னையில் 4 துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தினார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் வட்டம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் வெள்ளத்தை தணிப்பதற்காக தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து கடல் வரை நேரடியாக ரூ.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெருமூடிய கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல், ஒக்கியம் மடுவில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் விரிவான மறுசீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள், பள்ளிக்கரணை அணை ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை ரூ.57.70 கோடி மதிப்பீட்டில் மூடிய பெருவடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை தலைமைச் செயலர் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார்.
கும்மிடிப்பூண்டி தோப்பு சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.145 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம்கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடையூறின்றி பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளவும், உரிய காலத்தில் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார்.
இதேபோல், அடையாறு கிரீன்வேஸ் சாலையில் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தலைமைச் செயலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி சார்பில் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள 42 ஏக்கர் பரப்பளவிலான ராமன் தாங்கல் ஏரியில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைக்கும் பணியையும் தலைமைச் செயலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் ஆகாயத்தாமரை அகற்றுதல், பறவைகளுக்கான தீவுகள் அமைத்தல், 10,500 மரங்கள் நடுதல், சூரிய சக்தியில் இயங்கும் நீரூற்று, நடைபாதை, மின்விளக்கு வசதி, சுற்றிலும் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர், அடையாறு மண்டலம், கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுகளின்போது, நெடுஞ்சாலைத் துறைச் செயலர் ஆர்.செல்வராஜ், நீர்வளத் துறை செயலர் ஜெயகாந்தன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் பாஸ்கர பாண்டியன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்கநர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.