சென்னை: சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள் `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் பலர், “சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே ஏராளமான நாய்கள் உள்ளன. இவை பொதுமக்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மேயர், “சென்னை சாலைகளில் சுற்றும் தெரு நாய்களை பிடித்து, இனக்கட்டுப்பாடு செய்து வருகிறோம். ஒரு நாளில் 85 நாய்களுக்குதான் இனக்கட்டுப்பாடு செய்ய முடியும்.
அவற்றுக்கு வெறி நோய் தடுப்பூசியும் போடப்படுகிறது. இனக்கட்டுப்பாடு செய்த பிறகு, அவற்றுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார். தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள், “தெரு நாய்களைப் பிடித்து இனக்கட்டுப்பாடு செய்வது மட்டும் தீர்வாகாது” என்றனர்.
பின்னர் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநகராட்சி கவுன்சிலர்கள் 200 பேர் ரூ.4 லட்சம் செலவில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நிர்வாக அனுமதி அளித்ததற்கு மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருமழையால் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பை சீர்செய்ய அனைத்து மண்டலங்களிலும் பயன்படுத்த 150 ராட்சத மோட்டார் பம்புகள், டிராக்டர் மூலம் இயங்கும் 477 நீர் இறைக்கும் இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தவும், மணலி மண்டலம், 17-வது வார்டு, கொசப்பூர்பகுதி, தியாகி விசுவநாததாஸ் நகரில் அமைந்துள்ள பூங்காவுக்கு `முத்தமிழ் அறிஞர் கலைஞர் பூங்கா’ என பெயர் சூட்டவும் மாமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் ஜெய்சங்கர் வசித்துவந்த, தேனாம்பேட்டை மண்டலம், 111-வது வார்டு, கல்லூரி பாதையை, `ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்ய அரசின் ஒப்புதலைப் பெற அனுமதி அளித்தும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராஜ் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, அச்சாலைகளை ரூ.19 கோடியில் அகலப்படுத்தவும், தனி வழிச் சாலை அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பேசின் பாலம் சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை, அண்ணாநகர் 6-வது நிழற்சாலை, சி.வி.ராமன் சாலை, ஜி.என்.செட்டி சாலை, பி.எஸ்.குமாரசுவாமி ராஜா சாலை, வேளச்சேரி பிரதானசாலை உள்ளிட்ட 23 பேருந்து தட சாலையில் ரூ.28.80 கோடியில் நடைபாதைகள் அமைக்கவும், ரிப்பன் மாளிகையில் ரூ.1 கோடியில் 15 பேர் செல்லக்கூடிய பெரிய மின்தூக்கி அமைக்கவும், வானிலை நிலவரங்களை கண்காணிக்க 75 இடங்களில் சுற்றுச்சூழல் சென்சார்களை நிறுவவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் மொத்தம் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.