சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, செங்கோட்டை, நாகர்கோவில் மற்றும் போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆக.14-ம் தேதி இரவு 11.50 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06027) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து ஆக.17-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதி விரைவு சிறப்பு ரயில் (06028) புறப்பட்டு, மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து ஆக.14-ம் தேதி இரவு 9.55 மணிக்கு சிறப்பு ரயில் (06089) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து ஆக.17-ம் தேதி இரவு 7.45 மணிக்கு சிறப்பு ரயில் (06090) புறப்பட்டு, மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
நாகர்கோவிலில் இருந்து ஆக.17-ம் தேதி இரவு 11.15 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06012) புறப்பட்டு, மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். தாம்பரத்தில் இருந்து ஆக.18-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் (06011) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
இதுதவிர, மங்களூர் சந்திப்பு – திருவனந்தபுரம் வடக்கு இடையே வாரம் இரு முறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (8-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.