சென்னை: சென்னையிலிருந்து துர்காபூர் புறப்பட இருந்த விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாரானது. விமானத்தில் 158 பயணிகள், 6 விமான ஊழியர்கள் இருந்தனர்.
விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, விமானம் ஓடுபாதையில் ஓட இருந்தபோது, விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி, விமான கேப்டன் கேபினில் ஒலித்தது. இதையடுத்து விமான பணிப்பெண்கள் விரைந்து சென்று அவசர கால கதவைத் திறக்க முயன்றது யார் என்பதை பார்த்தனர். அப்போது அவசர கால கதவு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சர்க்கார் (27) என்ற பயணிதான் கதவைத் திறக்க முயன்றார் என்பது தெரியவந்தது.
விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, அந்த பயணியிடம் விசாரணை நடத்தியபோது, சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு படிப்பதாகவும், சொந்த வேலையாக துர்காபூர் செல்வதாகவும், தெரியாமல் அவசர கால கதவைத் திறப்பதற்கான பட்டனை அழுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.
அந்த விளக்கத்தை ஏற்காத அதிகாரிகள், அவரது பயணத்தை ரத்துசெய்து, சென்னை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னையிலிருந்து துர்காபூர் புறப்பட்டது.