தென்காசி: சுரண்டை அருகே குளத்தில் இருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பான விவகாரத்தில், அதிமுக எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கிராமத்தைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள கள்ளம்புளி குளத்துக்கு கருப்பாநதி அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்தக் குளம் நிரம்பிய பின்னர், அருகில் உள்ள குலையனேரி குளத்துக்கு தண்ணீர் செல்வது வழக்கம். கள்ளம்புளி குளத்தை நம்பி 48 ஏக்கர் நஞ்சை, 500 ஏக்கர்புஞ்சை நிலங்கள் உள்ளன.
இந்நிலையில், கள்ளம்புளி குளத்தில் இருந்து குலைநேரி குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக தனி குழாய் பதிக்கும் திட்டம் சில நாட்களுக்கு முன்தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் குளத்துக்குள் குடியிருக்கும் போராட்டத்தை 2 நாட்களுக்கு முன்பு மேற்கொண்டனர். அவர்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குழாய் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிடுமாறு பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கள்ளம்புளி கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கிராமத்தை சுற்றிலும் தடுப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டது. சிறிய கிராமத்தில் 1 ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 5 ஆய்வாளர்கள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
நேற்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மண் அள்ளும்இயந்திரத்தின் மூலம் குழாய் பதிக்கும் பணியை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்இயந்திரத்தை முற்றுகையிட்டு,கற்களை வீசினர். இயந்திரம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், குழாய் பதிக்கும்திட்டத்தை முற்றிலுமாக கைவிடவலியுறுத்தி பொதுமக்கள்குளத்துக்குள் அமர்ந்தனர். கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி (அதிமுக) போராட்டம் நடத்திய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து,குளத்துக்குள் அமர்ந்து தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கேயே கிராம மக்கள் சமையலைத் தொடங்கினர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து, கள்ளம்புளி – சேர்த்தமரம் சாலையில் எம்எல்ஏ தலைமையில் மறியல் நடைபெற்றது. 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தைநடத்தினர். இது தொடர்பானகருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.