சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய பாக்கி சுங்க கட்டணத்தில் 50 சதவீதத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்ளும், மீதியை செப்டம்பர் மாதத்திலும் செலுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை – கன்னியாகுமரி, கன்னியாகுமரி – எட்டூர்வட்டம், சாலைப்புதூர் – மதுரை, நாங்குநேரி – கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்கியதற்காக செலுத்த வேண்டிய சுங்கக் கட்டண பாக்கி 276 கோடி ரூபாய் செலுத்தப்படாமல் உள்ளதாகக் கூறி, சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் நான்கு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், சுங்கக் கட்டண பாக்கி 276 கோடி ரூபாயை செலுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண மாநில போக்குவரத்துத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நான்கு சுங்கச் சாவடிகள் வழியாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்து துறை செயலாளர் பேச்சு நடத்தி வருவதாகவும், விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்து துறை செயலாளர் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பாக்கி சுங்க கட்டணத்தில் 50 சதவீதத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்ளும், மீதியை செப்டம்பர் மாதத்திலும் செலுத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் மட்டும் இயக்கப்படும் பேருந்துகளுக்கு 50 சதவீத கட்டணமும், இரு மாவட்டங்களுக்கு இடையில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமும் செலுத்தப்படும் எனவும், அனைத்து அரசு பேருந்துகளும் ‘ஃபாஸ்டாக்’ மூலம் சுங்கக்கட்டணம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை, நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.