சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் சுகாதாரத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு மே முதல் இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 4,576 உதவி மருத்துவர்கள், 27 மாற்றுத் திறனாளி செவிலியர்கள், 2,772 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளடக்கிய 7,375 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்துக்கு 182 உதவி மருத்துவ அலுவலர்கள் (பொது), மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்துக்கு 48 பல் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்துக்கு 324 அறுவை அரங்கு உதவியாளர்கள் மற்றும் தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறைக்கு ஒரு திறன்மிகு உதவியாளர் நிலை-1 என 555 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்துக்கு 18 உளவியல் உதவி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்கள், மருந்து கட்டுப்பாடு இயக்ககத்துக்கு 17 மருந்து ஆய்வாளர்கள், குடும்பநல இயக்ககத்துக்கு 54 வட்டார சுகாதாரப் புள்ளியிலாளர்கள் என 89 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் 644 பேருக்கு சென்னை, மாநிலக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு, சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில்குமார், மருந்து கட்டுப்பாடு இயக்குநர் ஆர்.லால்வேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்டிடங்கள் திறப்பு: தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம், 66 புதிய பள்ளிக் கட்டிடங்கள், 4 புதிய நூலகக் கட்டிடங்கள், 49 பொது விநியோகக் கடைகள், 26 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள், 25 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் உள்பட மொத்தம் ரூ.104.24 கோடி மதிப்பிலான கட்டிடங்களை நேற்று காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தவிர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 818 சாலை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 124.97 கோடி மதிப்பில் 12 கோயில்களில் 17 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் ரூ.32.53 கோடி மதிப்பில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 9 கோயில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.
அதேபோல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆகியவை சார்பில் ரூ.60.85 கோடியில் நவீன கிடங்குகளையும் முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திலும் நுகர்பொருள் வாணிபக் கழகத்திலும் 55 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, அர.சக்கரபாணி, ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.