சென்னை: விரைவில் அனைத்து உண்மைகளும் வெளியே வரும். ‘சி.எம். சார்’ பழி வாங்க வேண்டும் என்றால் என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள் என்று வீடியோ வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்புகளும் குவிந்தன. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் 2 நாட்களுக்குப் பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியிருப்பதாவது: என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி நிறைந்த தருணத்தை நான் எதிர்கொண்டது கிடையாது. சுற்றுப் பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருவதற்கு, அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பும், பாசமும்தான் காரணம். அந்த அன்புக்கும், பாசத்துக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதனால்தான் இந்த சுற்றுப் பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி, அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் பாதுகாப்புக்கான இடங்களை தேர்ந்தெடுத்து, அந்த இடங்களுக்கு அனுமதி தர கோரி காவல் துறையிடம் கேட்போம். ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன்தான். அந்த நேரத்தில், அத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அந்த ஊரை விட்டு என்னால் எப்படி கிளம்பிவர முடியும்? நான் திரும்ப அங்கே போனால், அதை காரணம் காட்டி, பதற்றமான நிலையில், அங்கு வேறு சில அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் அங்கு மீண்டும் செல்லவில்லை.
இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கும் அத்தனை குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். எனக்குத் தெரியும், என்ன சொன்னாலும் இது ஈடாகாது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என நான் வேண்டுகிறேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் நான் சந்திப்பேன்.
இந்த இக்கட்டான நேரத்தில் எங்களுடைய வலிகளை, நிலைமையைப் புரிந்து கொண்டு, எங்களுக்காகப் பேசிய அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரூரில் மட்டும் ஏன்: ஏறத்தாழ 5 மாவட்டங்களுக்கு பிரச்சாரத்துக்கு சென்றோம். அங்கெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள், அந்த உண்மைகளை எல்லாம் வெளியே சொல்லும் போது, எனக்கு கடவுளே நேரில் வந்து இறங்கி அந்த உண்மைகளை சொல்வதுபோலத் தோன்றியது.
எந்த தவறும் செய்யவில்லை. விரைவில் எல்லா உண்மைகளும் வெளியே வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க நின்று பேசிக்கொண்டு இருந்ததை தவிர, நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் எதுவுமே செய்யவில்லை. ஆனாலும், எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மீதும், சமூக வலைதளங்களைச் சேர்ந்த நண்பர்கள், தோழர்கள் மீதும் குற்றப்பத்திரிகை (எஃப்ஐஆர்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘சிஎம் சார்’ உங்களுக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏதாவது இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நண்பர்களே, தோழர்களே, நமது அரசியல் பயணம், இன்னும் வலிமையாகவும், இன்னும் தைரியத்தோடும் தொடரும்.இவ்வாறு விஜய் பேசியுள்ளார்.