சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் 2-வது நாளாக நேற்றும் வருமான வரி சோதனை நடைபெற்றது. சிவகாசியில் உள்ள 2 பட்டாசு நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், சிவகாசியில் இருந்து வடமாநிலங்களுக்கு பட்டாசுகளை கொண்டு செல்லும் 2 டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உட்பட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் பட்டாசு விற்பனை ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அதுகுறித்து உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் காலை 10 மணி முதல் 8 இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் இருந்து எவ்வளவு பட்டாசுகள் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன, யாரிடமிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது போன்ற விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
வட மாநிலத்தில் ஒரே இடத்தில் சிக்கிய ஏராளமான பட்டாசுகளுக்கு வரி செலுத்தப்படாதது தெரிந்ததால், அந்த பட்டாசுகளை தயாரித்த நிறுவனங்கள், வாகனங்களில் கொண்டுசென்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் சோதனை நடப்பதாகவும், இதில் சிக்கியுள்ள ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.