சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள கோகுலேஸ் பட்டாசு ஆலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. வெடி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சாத்தூர் நகர் போலீஸார் பட்டாசு ஆலை போர்மேன் ரவி (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி – சாத்தூர் இடையே உள்ள சின்னகாமன்பட்டியில் கமல் குமார் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ( பெசோ) உரிமம் பெற்று கோகுலேஸ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
இந்த பட்டாசு ஆலையில் 50- க்கும் மேற்பட்ட அறைகளின் என்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த போது மருந்து கலவை செய்யும் அறையில் காலை 8.30 மணி அளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகே இருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பட்டாசு ஆலை பணியாற்றிய 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அதில் மீனாம்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் மகாலிங்கம் (55) என்பவரது உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ராமமூர்த்தி என்ற தொழிலாளி உயிரிழந்தார். இதனால் சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6- ஆக அதிகரித்துள்ளது. வெடி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சாத்தூர் நகர் போலீஸார் பட்டாசு ஆலை போர்மேன் ரவி (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்த ஓ.கோவில்பட்டியை சேர்ந்த ராமராஜ் மகன் ராமமூர்த்தி (45), செவல்பட்டியை சேர்ந்த கூடலிங்கம் மகன் லிங்குசாமி (45) உட்பட 4 பேர் ஆகிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.