சென்னை: சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் ஏ.சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மையினர் நலத் திட்டங்களை மாவட்ட அளவில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் த.இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் அ.சுபேர்கான், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகிய உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் ஆகிய சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்புக் குழு மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொண்டு அவற்றை விரைவுபடுத்துவதற்கான பணிகளை செய்யும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிறப்புக் குழு உறுப்பினர் நியமனம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு, நல ஆணையர் ஆசியா மரியம் தகவல் அனுப்பியுள்ளார்.