மதுரை: சிபிஐ விசாரணை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் வழங்கி ரூ.2 கோடி இழப்பீடு ஏற்படுத்திய வழக்கில், அந்த வங்கியின் தலைமை மேலாளர் உள்பட 13 பேர் மீது சிபிஐ ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம், வங்கி தலைமை மேலாளர் பாலசுப்பிரமணியன், சண்முகவேல், ராமலட்சுமி, செண்பகமூர்த்தி, அம்மமுத்து உள்ளிட்ட எட்டு பேருக்கு தண்டனை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஐந்து பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தண்டனை பெற்ற பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட எட்டு பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். சில வழக்குகளில் போலீஸ் விசாரணை வேண்டாம் என, சிபிஐ விசாரணை கோரி மனுதாக்கல் செய்கின்றனர். ஏனென்றால் சிபிஐ எந்த ஒரு நிர்பந்தத்துக்கும் ஆளாகாமல் விசாரணை மேற்கொள்ளும் என பொதுமக்கள் நம்புகின்றனர். ஆனால் சிபிஐ விசாரணையில் தவறு இருப்பது தெரிகிறது. சில வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை விடுவித்துவிட்டு, சில நபர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
நிதி, பண மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் அந்தத் தொகையை திருப்பிச் செலுத்தினாலும் அவர்களை சாட்சிகளாக சிபிஐ சேர்த்து விடுகின்றனர். சிபிஐ மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். சிபிஐ விசாரணை அமைப்பானது தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கிறதா?. எனவே சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை பெறுவதற்கு இந்த நீதிமன்றம் சில பரிந்துரைகளை செய்ய விரும்புகிறது.
சிபிஐ வழக்குகளில் குற்றவாளிகள் பெயர் சேர்ப்பது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது என அனைத்தையும் சிபிஐ இயக்குநர் கண்காணிக்க வேண்டும். மேலும் அந்த வழக்குகள் தொடர்பான விசாரணை அதிகாரியையும் கண்காணிக்க வேண்டும்.
அதேபோல் சிபிஐ விசாரணை அதிகாரிகள், தேவையான அனைத்து அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே 8 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.