சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்ளவுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, காலை 10.50 மணியளவில் அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 24-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கூடுதல் பரிசோதனையில் அவருடை தலைசுற்றல் பிரச்சினைக்கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்ததே காரணம் என்பது தெரியவந்தது. இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவர் குழுவினர் முதல்வருக்கு இதய துடிப்பை சீராக்குவதற்கான சிகிச்சையை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் வேறு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியானது. முதல்வரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மருத்துவமனையில் இருந்தவாறு அரசு அலுவல்களை முதல்வர் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் முதல்வரை வரவேற்றனர். மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்துக்குச் சென்ற முதல்வரை, சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பொதுமக்கள், கட்சியினர் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: நலம் பெற்று வீடு திரும்பினேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்க தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், திரை கலைஞர்கள் என் உயிரோடு கலந்திருக்கும் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும். உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் பி.ஜி.அனில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்வர் இல்லம் திரும்புகிறார். முதல்வர் நலமாக இருக்கிறார். 3 நாள் இடைவெளிக்கு பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.