தூத்துக்குடி / திருநெல்வேலி: சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27), கடந்த ஜூலை 27-ம் தேதி நெல்லையில் கொலை செய்யப்பட்டார். சாதி மாறி காதலித்ததால் நடந்த இந்த கொலை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் நேற்று ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவின் செல்வகணேஷ் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர், பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கவின் செல்வகணேஷ் சாதி ரீதியாக படுகொலை செய்யப்பட்டது நாட்டுக்கே அவமானம். அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும். கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். இந்த வழக்கில் சாதி ரீதியான கும்பலுக்கு தொடர்புள்ளது. அவர்களையும் கைது செய்ய வேண்டும்.
சாதிய ரீதியிலான படுகொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் தேவை. சாதிய படுகொலைகள் வட மாநிலங்களில் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. எனவே, சாதிய வன்கொடுமை கொலைகளை தடுக்க தேசிய அளவிலான சட்டம் கொண்டு வர வேண்டும் என 2014-ல் இருந்து தேசிய மகளிர் ஆணையம், ஜனநாயக அமைப்புகள், உச்ச நீதிமன்றம் ஆகியவை வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், மத்திய பாஜக அரசு சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மறுத்து வருகிறது. எனவே, நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழக அரசு இந்த சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும். இவ்வாறு பிருந்தா காரத் கூறினார்.
தேர்தல் ஆணையம்… நெல்லையில் பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவை ஆளும் சக்திகள் பன்முகத்தன்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுகின்றன. தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால்பதிக்க முயல்கின்றன. அரசியலமைப்பு சட்டம், நாடாளுமன்ற விதிமுறைகள், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகின்றன.
மக்களுடன் இருப்பதும், மக்களுக்காக போராடுவதும், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை தோற்கடிப்பதுமே எங்களின் வியூகம். இண்டியா கூட்டணி பலமாக உள்ளது. தேர்தல் ஆணையம் வாக்குகளை உறுதி செய்வதற்குப் பதிலாக வாக்காளர்களை நீக்கும் ஆணையமாக செயல்பட்டு வருகிறது. இதை எதிர்த்து இண்டியா கூட்டணி போராடி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.