திருச்சி: சாதிய படுகொலைகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நிர்வாகி ஷியாம் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது: ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே, அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். நான் எம்எல்ஏவாக இருந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான சாதிய படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அப்போது இருந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், தற்போது வரை இது தொடர்கதையாகி வருகிறது.
எனவே, தமிழகத்தில் சாதிய படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அந்த சட்டத்தில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து நடத்தி தீர்ப்பு வழங்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும். சாதிய படுகொலைக்கு காரணமான சமூகச் சூழலைக் கண்டறிந்து, அதை களைய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சாதிவெறிக்கு எதிரான மனிதப் பண்பை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக-அதிமுக ஆகிய 2 கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது தங்களின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்களை சாதியின் அடிப்படையில் தேர்வு செய்யும் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து தற்போது பேசுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.