சென்னை: சாதிய கொலைகளுக்கு எதிராக சட்டமியற்ற வலியுறுத்தி வரும் 9-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அண்மையில் ஆந்திர பிரதேசம் மதனபள்ளியில் விசிக மாநில பொதுச்செயலாளர் சிவபிரசாத் பராமரித்து வரும் புத்தர்சிலை உடைக்கப்பட்டது.
இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உண்ணாவிரதம் இருந்த சிவபிரசாத் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஜகவுடன் தெலுங்கு தேசம் கைகோர்த்த பிறகு, காவல், வருவாய்த் துறை அதிகாரிகள் சங்பரிவார்களின் தொண்டர்களாக மாறிவிட்டார்கள்.
இதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. ஆந்திர பிரதேசத்தை மெல்ல மெல்ல சங்கிகளின் பிரதேசமாக மாற்றி வருகிறார்கள். சிவபிரசாத் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விஜயவாடாவில் ஆக. 23-ம் தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பிஹாரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழகத்திலும் அமல்படுத்த திட்ட மிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து விரிவாக விவாதிக்க, தமிழக முதல்வர் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். என்ஐஏ அதிகாரிகளுக்கு அமித்ஷா மறைமுக நெருக்கடியை தந்திருக்கிறார். தமிழகத்தை சனாதனமயப்படுத்த பாஜக துடிக்கிறது. இங்குள்ளகட்சிகளுடனும், சாதிய மதவாத அமைப்புகளுடனும் பாஜக இணைந்து செயல்படத் தொடங்கிய பிறகுதான், சாதியின் பெயரில் வன்முறைகள், கொலைகள் அதிகரித்திருக்கின்றன.
சாதிய கொலைகளை தடுப்பதற்கான சட்டம் இயற்ற பாஜக ஆர்வம் காட்டவில்லை. ஐ.டி. ஊழியர் கொலைக்கு பாஜக, ஆர்எஸ் எஸ் கண்டனம் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு எச்சரிக்கையாக இருந்து, வெறுப்பு அரசியலை பரவவிடாமல் தடுக்க வேண்டும்.
சாதிய கொலைகள் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். திமுக தேர்தல் வாக்குறுதிப்படி இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
திமுக கூட்டணி பலவீனமாக இருப்பதால், மேலும் சில கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. அதேநேரம், ஓபிஎஸ், தேமுதிக கூட்டணிக்கு வந்தால், இணைந்து பயணிப்பதில் சிக்கல் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.