சென்னை: சவுக்கு சங்கர் மீதான வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னுடைய யூடியூப் சேனல் செயல்பட காவல் ஆணையர் அருண் தடையாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “கருத்து சுதந்திரத்தை நல்ல நோக்கத்துக்காகவே பயன்படுத்த வேண்டுமே தவிர அதை மிரட்டும் நோக்கில் பயன்படுத்த கூடாது. வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளபோது ஊடக விசாரணை மேற்கொள்வது சரியானது அல்ல. இது தொடர்பாக சவுக்கு சங்கருக்கு உரிய அறிவுரையை அவர்தரப்பு வழக்கறிஞர் வழங்க வேண்டும்.
சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் விவரங்களை தமிழக உள்துறை செயலர், டிஜிபி, சென்னை காவல் துறை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சவுக்கு சங்கருக்கு எதிராக 13 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன. 24 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “சவுக்கு சங்கர் மீது உள்ள அனைத்து வழக்குகளிலும் 4 மாதத்துக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்து 6 மாதத்தில் வழக்குகளை விசாரணை நீதிமன்றங்கள் விசாரித்து முடிக்க வேண்டும். சவுக்கு சங்கர் கோரிக்கை டிஜிபியால் ஏற்கெனவே பரிசீலித்து முடித்து வைக்கப்பட்டுள்ளது”எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.