சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. அந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்படுவதாக தேமுதிகவுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், கூட்டணி ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடத்தை அதிமுக வழங்கவில்லை. மாறாக அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் இடம் வழங்குவதாக அதிமுக அறிவித்தது. இதனால் தேமுதிக தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். அதைத்தொடர்ந்து, கூட்டணி நிலைப்பாட்டை ஜனவரியில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் நீடிக்கவில்லை என்பதை தேமுதிக சூசகமாக தெரிவித்தது.
அதன்பின் திமுக, தவெக கட்சிகளுடன் தேமுதிக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திமுகவுடன் கூட்டணி? – பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: எனது திருமணம் கருணாநிதி தலைமையில்தான் நடைபெற்றது. விஜயகாந்துக்கும், கருணாநிதிக்கும் 45 ஆண்டுகால நட்பு இருந்தது. அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலினும், விஜயகாந்துடன் நட்பில் இருந்தார். விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நலம் விசாரித்தார். தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நட்புரீதியாக சந்தித்து நலம் விசாரித்தோம். நன்றாக இருப்பதாக கூறினார். விரைவில் குணமடைய வேண்டுமென அவருக்கு வாழ்த்து கூறிவிட்டு வந்தோம்.
இந்த சந்திப்பு 100 சதவீதம் மரியாதை நிமித்தமானது. அவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது வைத்த பற்றும், நாங்கள் அவர்கள் குடும்பத்தின் மீது வைத்துள்ள பற்றின் வெளிப்பாடுதான் இந்த சந்திப்பு. தேமுதிகவின் வளர்ச்சியில் நாங்கள் தற்போது முழு கவனத்தை செலுத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கூட்டணி குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. அதற்கான நேரம் வரும் போது உங்களிடம் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னோட்டமாக சந்திப்பு… இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் சேர தேமுதிக முயற்சித்து வருவதாகவும், அதற்கு முன்னோட்டமாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தங்கள் விருப்பத்தை பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாகவும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரட்டை இலக்கத்தில் சட்டப்பேரவை இடங்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க தேமுதிக கோரிக்கை வைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.