புதுச்சேரி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் திமுகவுக்கு 20 இடமும், கூட்டணிக் கட்சிகளுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்
புதுவை மாநில உருளையன்பேட்டை தொகுதியின், திமுக “செயல் வீரர்கள்” மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா பேசியதாவது: “இலவச அரிசி டெண்டரில் முறைகேடும், ஊழலும் நடந்துள்ளது. அந்த டெண்டரை கைவிட்டு, வேறு டெண்டரை அரசு விட வேண்டும். இல்லையெனில் திமுக 18-ம் தேதி போராட்டம் நடத்தும். தேர்தல் காலமான 7 மாதங்களும் திடீர், திடீரென போராட்டங்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
5 அல்லது 10 மணி நேரத்திற்குள் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டாலும் கழகத்தினர் ஒன்று திரண்டு கலந்து கொள்ள வேண்டும். ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் மனைகளின் விலை உயர வேண்டும், அந்த மனைகளுக்கு வங்கிகளில் கடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக நில வழிகாட்டி மதிப்பை உயர்த்துகின்றனர். முன்பு போல் போராட்டம் மட்டும் நடத்தப்படாது. அரசின் தவறுகளை எதிர்த்து நீதிமன்றமும் செல்வோம். ஆட்சியாளர்களுக்கும், ஆளுநருக்கும் முரண்பாடு உள்ளது.
அதனால் எந்த கோப்புக்கும் ஆளுநர் அனுமதி தருவதில்லை. முதல்வர் மாநில அந்தஸ்து கேட்பார். ஆனால் தட்டாஞ்சாவடியை தாண்டி எங்கும் செல்ல மாட்டார். பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சென்று சந்திக்க மாட்டார். டெல்லி சென்று கதவை தட்டினால் தானே கிடைக்கும். இந்த ஆட்சியில் 423 ரெஸ்டோ பார்கள் அனுமதி கொடுக்கப்பட்டு அங்கெல்லாம் மெல்லிசை நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரே ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை.
2026 தேர்தலில் புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளில் 20 தொகுதிகளை திமுகவுக்கு கேட்டுப் பெற முடிவு செய்துள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு 10 தொகுதிகளை தர உள்ளோம். கட்சி வளர்ச்சிக்காக இந்த தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கூட்டணி கட்சியினர் பேசுவர். அது அவர்களது உரிமை. அதற்காக அவர்களிடம் சங்கடப்பட்டு நிற்காதீர்கள். கூட்டணி கட்சியினரை தற்போது உதாசீனப்படுத்திவிட்டு தேர்தல் நேரத்தில் சென்று நிற்காதீர்கள்.
அவர்களிடம் தற்போது இருந்தே தொடர்பில் இருங்கள். மாநில அந்தஸ்து தொடர்பாக ஒரு கருத்தரங்கம் நடத்த உள்ளோம். மேலும், மாணவர்களுக்காக ஒரு நிகழ்ச்சியும் நடத்த உள்ளோம். அத்துடன் தமிழக துணை மூதல்வர் உதயநிதி ஸ்டாலினை அழைத்து ஒரு நிகழ்ச்சியும் நடத்த உள்ளோம். இனி கட்சிப் பணி படு பிஸியாகத்தான் இருக்கும். அனைவரும் சிறப்பாக பணியாற்றி 2026-ல் கழக ஆட்சியை புதுச்சேரியில் கொண்டு வர வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்.