சென்னை: தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 17 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று (மே.19) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் மிக கனமழையும், நாளை (மே.20) கோவையில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா, “மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து வலுவடையக்கூடும்.
இன்று தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 20-ம் தேதி கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் மே 21 முதல் மே 25ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த 2 நாட்களில் சென்னையில் வெப்பம் குறைவாக இருக்கும். அதன்பின்னர் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும். தமிழகத்தில் இந்த கோடைக்காலத்தில் 192.7 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருந்துள்ளது. இது இயல்பை விட 90 சதவீதம் அதிகம் ஆகும்’ எனத் தெரிவித்தார்