சென்னை: கோவையில் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை அக்டோபர் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இந்த மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ 2020-ல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவிநாசி சாலை மேம்பாலம், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் (09.10.2025) மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.
கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்’ எனத் தெரிவித்தார்.