வரும் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு வென்று தங்களது கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் மதிமுக-வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. திமுக கூட்டணியில் அவர் நினைப்பது சாத்தியப்படுமா என்று தெரியாத நிலையில், கோவையில் இம்முறை தங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்க வேண்டும் என மதிமுக-வினர் உரிமைக் கொடி தூக்கி இருக்கிறார்கள்.
பஞ்சாலைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள கோவை மாவட்டத்தில் மதிமுக-வுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டு. இப்போதும் வைகோ கோவைக்கு வந்தால் விமான நிலையத்தில் திரளும் தொண்டர்களே அதற்கு சாட்சி. மதிமுக-வை வைகோ தொடங்கிய போது அவருக்கு பின்னால் நின்ற தளகர்த்தர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் உள்ளிட்டோர் இப்பகுதியைச் சேர்ந்தவர்களே. இத்தனை இருந்தாலும் கோவை பகுதியில் போட்டியிட மதிமுக பெரிதாக மெனக்கிட்டது இல்லை.
2016-ல், மக்கள் நல கூட்டணியில் இருந்த போது கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மதிமுக போட்டியிட்டது. அதன் பிறகு கோவையை மதிமுக பெரிதாக கருதவில்லை. இந்தச் சூழலில் 2026-ல் கோவையில் ஒரு தொகுதியில் மதிமுக போட்டியிடும் வகையில் திமுக-விடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோவை மதிமுக-வினர் தலைமையை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய கோவை மதிமுக நிர்வாகிகள் சிலர், “கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் மதிமுக வலுவாக உள்ளது. திராவிட இயக்க மூத்த முன்னோடிகள், தனிப்பட்ட முறையில் வைகோவுக்கென இருக்கும் ஆதரவாளர்கள், மதிமுக ஆதரவாளர்கள் கணிசமாக கோவையில் உள்ளனர். எனவே தான் அவைத் தலைவர், உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் கோவையைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
கோவையில் ஏதாவது ஒரு தொகுதியில் மதிமுக போட்டியிட வேண்டும் என கடந்த தேர்தலிலேயே கோரிக்கை வைத்தோம். அப்போது எங்களுக்கு கோவை வடக்கு ஒதுக்கப்படுவதாக இருந்தது. ஆனால், கோவை வடக்கில் பண பலம் பொருந்திய காண்ட்ராக்டர் ஒருவரை அதிமுக நிறுத்தப் போவதாக அப்போது பேச்சு அடிபட்டது. அப்படி நிறுத்தப்பட்டால் அவரைச் சமாளிக்க மதிமுக-வால் முடியாது, திமுக தான் சரிப்பட்டு வரும் என திமுக தலைமை எண்ணியது. அதனால் கோவை வடக்கு தொகுதிக்கு பதிலாக பல்லடம் தொகுதியை மதிமுக-வுக்கு தந்தார்கள்.
கடந்த முறை கோவை வடக்கில் திமுக போட்டியிட்டது. ஆனால், அதிமுக சார்பில் அந்த கண்ட்ராக்டர் போட்டியிடவில்லை. அதுமட்டுமல்லாது கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிபெறவில்லை. ஒருவேளை, கோவை வடக்கை மதிமுக-வுக்கு தந்திருந்தால் அதில் வெற்றி கிடைத்திருக்கலாம். எனவே, கடந்த முறையை போல் எதையாவது சொல்லி மறுக்காமல் இம்முறை கோவையில் ஏதாவது ஒரு தொகுதியை மதிமுக-வுக்கு ஒதுக்கவைக்க வேண்டும் என தலைமைக்கு வலியுறுத்தி இருக்கிறோம்” என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ், “கோவை வடக்கு அல்லது கோவை தெற்கு தொகுதியை இம்முறை நமக்குக் கேட்டுப் பெற வேண்டும் என தலைமையிடம் சொல்லி இருக்கிறோம். கோவையில் அனைத்து வார்டுகளிலும் மதிமுக-வுக்கு முழுமையான கட்டமைப்பு உள்ளது. தொண்டர்களின் ஆதரவும் உள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் கோவையில் ஒரு தொகுதியைக் கேட்கிறோம். இம்முறை நிச்சயம் அது கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

கோவை திமுக நிர்வாகிகளோ, “கடந்த முறை எங்களாலேயே கோவையில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் மதிமுக-வுக்கு ஒரு தொகுதியைக் கொடுத்திருந்தால் அவர்கள் ஜெயித்திருப்பார்களா என்று தெரியாது. இந்தத் தொகுதி எங்களுக்கு வேண்டும் என கூட்டணி தலைமையிடம் கூட்டணிக் கட்சிகள் கேட்பது இயல்பான ஒன்று தான். ஆனால், இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்க வேண்டியது கூட்டணி தலைமை தான். ஆசைப்படுவது எல்லாமுமா கிடைத்து விடுகிறது” என்று அர்த்தமாய் சிரிக்கிறார்கள்.