சென்னை: கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஈரோடு மாவட்டம் பர்கூர் கிராமத்தில் பந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் மகா பெரிய குண்டம் விழாவில், கோயில் வழக்கப்படி தனது குடும்பத்தினர் தலைமையில் சுவாமி ஊர்வலம் நடத்தப்படும். தங்கள் குடும்பத்தினருக்கு தான் முதல் மரியாதை வழங்கப்படும். அந்த வகையில் தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும்,” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூன் 27) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பல கோயில் விழாக்களில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட காரணமே, முதல் மரியாதை தான். கோயில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர்.
இது, விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது. இதுபோன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது. கடவுள் முன் அனைவரும் சமம். கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும் எனக்கூறி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.