ஈரோடு: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தனது சொந்த தொகுதியான கோபியில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை.
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கோவை வழியாக விமானத்தில் சென்னை செல்வதற்காக நேற்று புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை செல்கிறேன். இரவே வீடு திரும்புகிறேன். எனது கருத்துக்கு பொதுச் செயலாளர் இதுவரை பதில் அளிக்கவில்லை. இது தொடர்பான எனது கருத்தை ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். கட்சி ஒருங்கிணைப்பு பணிகள் எப்படி போகிறது என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, கோபியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கேள்விக்கு பதில் அளிக்காமல், கை கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.