ராஜபாளையம்: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து 10 நிமிட இடைவெளியில் தென்காசி, சிவகாசி வழியாக மதுரை, சென்னைக்கு அடுத்தடுத்து இரு ரயில்கள் புறப்படுவதால், ரயில்களின் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கொல்லம் – சென்னை ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு 1904-ம் ஆண்டு முதல் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட இந்த ரயில் சேவை, 2018-ம் ஆண்டு முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை – கொல்லம் விரைவு ரயில் (16102) தினசரி பிற்பகல் 12 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
மதுரை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – கொல்லம் எக்ஸ்பிரஸ், புனலூர் – குருவாயூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்களும் இணைக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் முதல் மதுரை – குருவாயூர் (16327/16328) எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குருவாயூரில் தினசரி காலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை வந்தடைகிறது.
கொல்லத்தில் இருந்து 12 மணிக்கு சென்னை ரயில் புறப்படும் நிலையில், 12.10-க்கு குருவாயூர் ரயில் மதுரை புறப்படுகிறது. கொல்லத்தில் இருந்து தென்காசி, ராஜபாளையம், சிவகாசி மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து புறப்படுவதால் அதன் பயனை பயணிகள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இதனால் கொல்லம் – சென்னை ரயில் கொல்லத்தில் இருந்து புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கொல்லம் – சென்னை (16102) விரைவு ரயில் மாலை 4 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் செற்றடையும் வகையில் அட்டவணை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அட்டவணை மாற்றம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.