விழுப்புரம்: கட்சி விரோத செயல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அன்புமணிக்கு, ராமதாஸ் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் அன்புமணியால் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், அவரது தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த 17-ம் தேதி ராமதாஸால் நடத்தப்பட்ட மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனரான ராமதாஸே பாமகவின் தலைவராக செயல்படுவார் என்ற தீர்மானம் நிறைவேறியது.
மேலும், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவற்றை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்புமாறு கட்சியின் கவுரவத் தலைவர் அறிக்கை சமர்ப்பித்தார். இந்நிலையில், ராமதாஸ் தலைமையில் பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டம், தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரான சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அவர் பேசியதாவது: பட்டானூரில் நடைபெற்ற மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், செயல் தலைவர் அன்புமணி மீதான கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து கட்சி தலைமைக்கு வரப்பெற்ற 16 குற்றச்சாட்டுகள் பொதுக்குழுவில் முன்வைக்கப்பட்டு, கட்சியின் அமைப்பு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆலோசனை நடத்தி, குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அமைப்பு செயலாளர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பான விளக்கம் மற்றும் ஆவணங்களை ஆக.31-ம் தேதிக்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அருள் கூறும்போது, “பாமக விதிகளின்படி நிறுவனர் ராமதாஸ் மட்டுமே நிரந்தரமானவர். எனவே, வழக்கறிஞர் பாலு கூறும் தகவல்கள் தவறானவை. ஆக.31-ம் தேதிக்குள் அன்புமணி விளக்கம் அளிக்கத் தவறினால், 9 பேர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ராமதாஸுக்கு சில பரிந்துரைகளை அளிக்கும். மேல் நடவடிக்கை குறித்து ராமதாஸ் முடிவு செய்வார். வழக்கறிஞர் பாலுவின் பொய்களை தவிர்த்து, உண்மை நிலையை அறிந்தால், ராமதாஸை சந்திக்க அன்புமணி முன்வருவார்” என்றார்.
குற்றச்சாட்டுகள் என்ன? – புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து, மைக்கை தூக்கி வீசியது, பனையூரில் புதிய அலுவலகம் தொடங்கியுள்ளதாக கூறி கட்சியை பிளவுபடுத்தியது, சமூக வலைதளங்களில் சிலர் மூலம் ராமதாஸுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டது, பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் உதாசீனப்படுத்தியது, தைலாபுரம் வீட்டில் ஒட்டு கேட்புக் கருவியை வைத்தது, ராமதாஸ் அனுமதியின்றி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தியது மற்றும் உரிமை மீட்பு என்ற பெயரில் பயணம் மேற்கொண்டது, ராமதாஸிடம் பேசாமலேயே 40 முறை பேசியதாக பொதுவெளியில் பொய் பேசியது உட்பட 16 குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ளன.