சென்னை: குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமான கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, டேவிட் மனோகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் ஜிஎஸ்டி சாலை பகுதிகளில் மழை காலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. சாலையோர கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றாததும், குப்பைகளை கொட்டும் இடங்களாக மாற்றியிருப்பதும் முக்கிய காரணம். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் வசதியும் இல்லை.
பல்லாவரம் பெரிய எரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கு எதிரே செல்லும் கால்வாய், தாம்பரம் அரசு மருத்துவமனை அருகே செல்லும் கால்வாய், பல்லாவரம் பாண்ட்ஸ் சிக்னல் அருகே செல்லும் கால்வாய் ஆகியவற்றின் மூலம் வெளியேறும் சூழலில் இந்த கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் செல்ல வழியின்றி சாலைகளில் வழிந்தோடி தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
எனவே, மழைக்காலம் நெருங்கும் முன்பாக இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் முதன்மை செயலர், பொதுப்பணித்துறை செயலர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என, அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஒய்.கவிதா ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் 3 வார காலத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.